தமிழக வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், கார் மற்றும் பைக்குகளுக்கான 'பேன்சி' நம்பர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான சிறப்பு எண் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டு, ரூ.2,000 முதல் ரூ.8 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், சிறப்பு பதிவெண் கட்டணம் தொடர்பான வரைவு திருத்த விபரத்தை அரசிதழில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், வாகனங்களுக்கான சிறப்பு எண் (பேன்சி எண்) பெறுவதற்கு யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும், இடைத்தரகர்களை நம்பி அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டாம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. இருப்பினும், வாகனங்களுக்கான சிறப்பு பதிவு எண் கட்டணங்களை திருத்தி அமைத்து தமிழக அரசுக்கான வருவாயை உயர்த்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.'
வாகனங்களுக்கான பேன்சி எண் எனப்படும் சிறப்பு பதிவெண்ணை முன்கூட்டியே பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு, வாகனத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் பிற வாகனங்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
மேலும், அரசால் ஒதுக்கப்படும் முன்பதிவு எண்களுக்கு தற்போதைய வரிசை மற்றும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு ரூ.80,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 13 மற்றும் 14-வது வரிசைக்கான சிறப்பு எண்களை பெற ரூ.8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் மூலம் சிறப்பு எண்கள் ஒதுக்கீடு செய்யும் போது அரசுக்கான வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.