முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது என்பதில் எங்கள் தலைவர் தலைமையிலான அரசும், அதில் அமைச்சராக இருந்த நானும் உறுதியாக இருந்தோம் என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: ‘த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு பேசலாம். தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க த.வெ.க. அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். முந்தைய ஆட்சிக் காலத்தில் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சிறுபிள்ளைத்தனமான, பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாத பச்சைப் பொய். செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டவை என்பதை முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடையிலேயே பகிரங்கமாகக் குற்றச்சாட்டாக வைத்தார்.’
மேலும் அவர், ‘டொயோட்டா வாகனத் துறை நிறுவனம் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்யும் தங்களது இறுதி முடிவை தற்போதைய தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவித்துள்ளது. என்னால் இவர்கள் சொல்லும் எல்லா பொய்களுக்கும் புள்ளிவிவரங்களோடு பதில் அளிக்க முடியும். முதலீட்டு ஊக்குவிப்பைச் சுற்றியுள்ள அற்ப அரசியல் தாக்குதல்கள் மாநிலத்திற்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். எனது பதவிக் காலம் முழுவதும் முதலீடுகள் தொடர்பாக பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால் எந்த முதலீட்டாளரையும் சிரமமான நிலைக்குத் தள்ளாதிருப்பதில் எப்போதும் கவனமாக இருந்தேன். நேற்று முதல், பல தொழில் துறையினர் எனக்கு தொலைபேசி மூலமாகப் பேசி, இந்த புதிய அரசின் பிரதிநிதிகள் விமர்சனங்களை கையாளும் விதமும், பொதுவெளியில் சேறு வாரி இறைக்கும் விதமும் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உலகளாவிய முதலீட்டாளர்களின் முன்னிலையில் தமிழ்நாடு அவமானப்படுத்தப்படுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.
‘மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தை விட்டு முதலீடுகள் வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலீடுகள் வெளியேறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்க வேண்டியதே புதிய அரசின் கடமை. அதற்கு பதிலாக, முந்தைய அரசின் கடின உழைப்பின் மீது தங்களது பெயர் ஒட்டும் செயலில் அவர்கள் ஈடுபடக் கூடாது. 12.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலமாக 30 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவானது மாண்புமிகு திராவிட நாயகர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்பது உலகம் அறிந்த உண்மை. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பல இதர காரணங்களினால் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்டை வைத்துக்கொண்டு 3 லட்சம் கோடி இழப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு. முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 3 லட்சம் கோடிக்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ள நிலையில் எங்கள் ஆட்சிக் காலத்தில் ரூ.12.6 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளையும், 36 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இது 2016-21 காலகட்டத்தைவிட 5 மடங்காகும். திராவிடர் மாடல் அரசு தொடர்ந்திருந்தால் இம்முறை குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும். இன்று இந்த அரசு சிறுபிள்ளைத்தனமான பேச்சுகளை குறைத்து தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த சாதனையை திராணியிருந்தால் முறியடித்து காட்டட்டும் பார்போம்.’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.