முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பேசும்போது அவரை கேலி செய்தவர்கள், தற்போது முதலமைச்சர் விஜய்யையும் அதேபோல் விமர்சிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘முன்பெல்லாம் தலைமைச் செயலகத்திற்கு புரோக்கர்கள் மட்டுமே வருவார்கள், வசூலுக்காகவே வந்தனர். ஆனால் இப்போது சாமானிய மக்கள் மட்டுமே வருகிறார்கள். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர் பேசியதை அன்று கிண்டல் செய்தார்கள். அதே டெக்னிக்கை தான் இப்போதும் பின்பற்றுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற வார்த்தை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சி நிதி குறித்து முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் திமுகவினருக்கு ஏன் பயம் வந்தது? என்று அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் நிதியமைச்சர் தொடர்புடைய ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோ கட்சி நிதி இல்லையா என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கட்சி நிதி பற்றி பேசியதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல திமுகவினர் பேரவையை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.
மின்சாரத்துறை குறித்த வெள்ளை அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. திமுகவின் அழுத்தத்தினாலேயே ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், வேறு ஏதேனும் உத்தரவாதங்கள் திமுகவால் அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.
சட்டசபையில் திமுகவினர் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதை வரலாறு அறியும். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டபோது, அப்போது சந்தித்தால் நல்லா இருக்காது என அவர்கள் தெரிவித்துவிட்டனர் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.