இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, மும்பையைச் சேர்ந்த 23 வயதான சூர்யான்ஷ் ஷெட்கே முதல் முறையாக இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு நிதிஷ் குமார் ரெட்டியின் இடது தொடை தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் தசை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர் அடுத்த 4 வாரங்களுக்கு விளையாட முடியாது என பிசிசிஐ மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா பந்துவீச முடியாத சூழலில், நிதிஷ் ரெட்டியின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக 251.92 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 131 ரன்கள் குவித்த சூர்யான்ஷ் ஷெட்கே, இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஏ தொடரில் இந்தியா ஏ அணிக்காக 5 போட்டிகளில் 147 ரன்கள் எடுத்து, 23 ஓவர்கள் வீசி அசத்தினார். இந்த சிறப்பான ஆட்டத்திறன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் டப்ளினில் 2 டி20 போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் 11 வரை இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி விளையாடும் முதல் டி20 தொடர் இதுவாகும்.