சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியது, சினிமா ஷூட்டிங் ஸ்பாட் போல இருந்ததாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பதிலுரையின்போது, முதலமைச்சர் விஜய் விவசாயிகளை கொச்சைப்படுத்தியதாகவும், சினிமா கேமரா முன் பேசுவதுபோல் குட்டிக்கதை சொன்னதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
‘செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும். சட்டமன்றத்தை ஒரு புனிதமான மக்கள் அவையாக நடத்தாமல், ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர். டயலாக்கை மனப்பாடம் செய்துவிட்டு போவதுபோல் அனைத்தையும் ஒப்பித்துவிட்டு சென்றுள்ளார்’ என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மேலும், ‘ரீல்ஸை மனதில் வைத்தே முதல்வருக்கு ஸ்கிரிப்ட் தரப்படுகிறது. மக்கள் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்காமல், சினிமா பஞ்ச் வசனங்களையும் குட்டிக்கதைகளையும் பேசி வருகிறார். முதலமைச்சர் எந்த பார்ட்டிக்கு ஃபண்ட் செல்கிறது என்பதற்கு ஆதாரம் தர வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.
சபாநாயகர் தங்களை பேச அனுமதிக்கவில்லை என்றும், சட்டமன்றத்தை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் போராடுவதாக கூறியது விவசாயிகளை அவமதிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.