சென்னையின் மணலி பகுதியில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகளின் போது மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்செழியன் தெரு சந்திப்பில், 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்காக, ராட்சத ட்ரில்லிங் இயந்திரம் மூலம் தரையை துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிலத்திற்கடியில் புதைக்கப்பட்டிருந்த மீத்தேன் வாயு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிக அழுத்தத்துடன் வாயு வெளியேறத் தொடங்கியது.
இந்த திடீர் வாயு கசிவால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். முக்கிய சாலை சந்திப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், அப்பகுதி மக்களிடையே பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக மணலி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகனாந்தம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், மணலை நிரப்பியும் வாயு கசிவை கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும், வாயுவின் அழுத்தம் குறையாததால், கசிவு தொடர்ந்தது.
தகவலறிந்த குழாய் பதிப்பு நிறுவனம், வாயு வெளியேறும் பிரதான வால்வை அடைத்ததன் மூலம், கசிவின் அளவு படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. மணலி போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீஞ்சூர், கொண்டக்கரையில் இருந்து கோயம்பேடு வரை நிலத்திற்கடியில் ‘டொராண்டோ’ என்ற பெயரில் மீத்தேன் இயற்கை வாயு குழாய் புதைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வாயு கசிவு ஏற்பட்டாலும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேரில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிந்து பலர் உயிரிழந்த நிலையில், மணலியில் மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.