வீதிகளில் பரவலாகக் காணப்படும் முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியம் நிறைந்தவை. குறிப்பாக, முருங்கை இலைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த முருங்கை இலையை தேநீர் போல பருகினால், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். மேலும், முருங்கையால் நமக்குக் கிடைக்கும் பல்வேறு நன்மைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு, இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மனப்பதற்றத்தைக் குறைக்கவும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கையை விட சிறந்த மாமருந்து வேறு எதுவும் இல்லை.
தற்போது, புரதச்சத்துக் குறைபாடுகளுக்கு சோயாவைப் போலவே முருங்கையும் பரிந்துரைக்கப்படுகிறது. மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக்கீரையில் உள்ளன. மனித உடலால் உற்பத்தி செய்ய முடியாத எட்டு அத்தியாவசிய அமினோ அமிலங்கள் பொதுவாக அசைவ உணவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால், இந்த எட்டு அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை ஆகும்.
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துச் சேர்த்து, தினமும் காலையில் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், உடலில் ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். மேலும், குழந்தையின்மைப் பிரச்சினைகளுக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.