கலைக்கப்பட்ட என்.டி.ராமாராவ் ஆட்சி..!
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் என்.டி.ராமாராவ், 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். அப்போது, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகம் இருந்தபோதிலும், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரா சட்ட மன்ற தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 46.3% வாக்குகளைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதுவே ஒரு அறிமுகக் கட்சியின் அதிகபட்ச வாக்கு சதவீதமாக பார்க்கப்படுகிறது.
1984-ஆம் ஆண்டு என்.டி.ஆர் இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில், நிதி அமைச்சராக இருந்த நதேந்த்லா பாஸ்கரராவ், "தனக்குதான் கட்சி எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்றும், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்" என, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் சமர்பித்தார். இதனை தொடர்ந்து, அப்போது ஆளுநராக இருந்த தாக்கூர் ராம் லால், என்.டி.ஆர் ஆட்சியை கலைத்ததோடு, பாஸ்கரராவிற்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த என்.டி.ஆர், அமெரிக்காவில் இருந்து உடனடியாக நாடு திரும்பினார். பின்னர், தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களை அழைத்து கொண்டு டெல்லி சென்ற என்.டி.ஆர், குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்.
குடியரசுத் தலைவரை சந்தித்த என்.டி.ஆர், "பெரும்பான்மை இல்லையென்ற நிலை வந்தால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டுமே தவிர, ஆட்சியை கலைக்கக் கூடாது" என வலியுறுத்தினார். என்டிஆரின் நீக்கத்திற்கு எதிராக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இது நாட்டையே உலுக்கியது.
இதனையெல்லாம் கருத்தில் கொண்ட அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், மீண்டும் என்டிஆர் ஆந்திராவில் ஆட்சி செய்யும் படி செய்ததோடு, ஆளுநர் ராம் லாலை மாற்றி, சங்கர் தயாள் சர்மாவை புதிய ஆளுநராக நியமித்தார். இப்படி ஆளுநரையே மாற்றிய பரபரப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
“நான் என்ன குற்றம் செய்தேன்” – எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக தனிப்பெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 37 இடங்களை திமுக – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இதனால், எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான நெருக்கடியை கொடுத்தது.
"மக்களவை தேர்தலில் தோற்றுப்போன கட்சிக்கு மாநிலத்தை ஆளும் தகுதி இல்லை" எனக் கூறி, பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மத்திய அரசு, ஆளுநர் மூலம், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவுவை பயன்படுத்தி எம்ஜிஆர் அரசை கலைத்தது. தமிழ்நாட்டுடன் சேர்த்து 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் “நான் என்ன குற்றம் செய்தேன்..” என்ற ஒற்றை கேள்வியுடன் தேர்தலை எதிர் கொண்டு மறுமுறை எம்ஜிஆர் ஆட்சியை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், விஜய் என சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து முதலமைச்சர் ஆன மூன்று, மூன்றெழுத்து நடிகர்களுக்கும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நெட்டின்சன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.