சனிக்கிழமைதோறும் பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நிற்பதை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒருவர் அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வது இயல்பு. சில சமயங்களில், கொள்கை முரண்பாடுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் காரணமாக சிலர் ஒரு கட்சியை விட்டு விலகி மற்றொரு கட்சியில் இணைவதும் சகஜம்தான். ஆனால், சமீப காலமாக சனிக்கிழமைதோறும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் பனையூர் பங்களா கேட் முன் நிற்பதை பார்க்கும்போது, ஜவுளிக் கடைகளில் ஆடித்தள்ளுபடிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் போல காட்சியளிக்கிறது.
பனையூர் பங்களா கேட் திறந்ததும், புதிய திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்து ஓடும் ரசிகர்களைப் போல் சென்றாலும், அங்கு கட்சித் தலைவரை பார்க்க முடிவதில்லை. யாரோ சிலர் கொடுக்கும் கட்சித் துண்டை தோளில் சுமந்து கொண்டு திரும்பி வருகின்றனர். தொண்டனின் நலன்களிலும், துன்பங்களிலும் இயக்கத் தலைமை பங்கேற்கும் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு தொண்டனும் கட்சிக்காக இரவு பகலாக உழைப்பான். ஆனால், கரூரில் தன்னை பார்க்க வந்த தொண்டர்கள், ரசிகர்கள் 41 பேர் இறந்ததைக்கூட திரும்பிப் பார்க்காத ஒரு தலைமையை நம்பி இவர்கள் செல்வதை பார்க்கும்போது, ‘இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புறாங்க’ என்ற நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.