சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார். நாகை, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி குறித்து அவர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிரே சி.வி.சண்முகத்தை கடுமையாக விமர்சித்து வைக்கப்பட்டிருந்த பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேனரில், ‘அன்று கும்பலாக வந்து ஊளையிட்ட குடிகார குள்ளநரி’, ‘இன்று அனாதையாக வந்து ஓலமிடும் குடிகார குள்ளநரி’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், சிங்கமும் குள்ளநரியும் சித்தரிக்கப்பட்டிருந்தன. இந்த பேனரை தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறும் வேளையில், கட்சியின் முக்கிய பிரமுகரை விமர்சித்து பேனர் வைக்கப்பட்ட சம்பவம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இது கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவுவதாகவும், நிர்வாகிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.
இந்த பேனர் விவகாரம் குறித்து கட்சித் தலைமை இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், இது போன்ற பேனர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.