அதிமுக எங்கள் எதிரி அல்ல, பங்காளியே. அவர்களுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு? என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காணவும், எங்கள் கண்களை திறக்கவும் இது உதவியுள்ளது. விரைவில் மாற்றம் வரும், அப்போது நாங்கள் யார் என்பதை காட்டுவோம். ஒரு கட்சியின் தொண்டர்களின் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, 10 நாட்களில் வேறு கூட்டணிக்கு செல்வது கேவலமானது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்கின்றனர். திமுக கூட்டணியிலிருந்து விலகி செல்பவர்களும் இதே முறையை பின்பற்றினால் நல்லது.
இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் வெல்வார் என நினைக்கவில்லை. இப்படி ஓர் அதிசயம் நடந்ததால், பலம் மிக்கவர்கள் பலியாகி விட்டனர். அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து திமுக பேசவில்லை. அதிமுக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல. பலமுறை கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டு வைத்திருந்தன. த.வெ.க. உடன் சென்றதற்கு காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக அப்படி சொல்கின்றனர். இப்படி கூட்டணி மாறும் கட்சிகளை 60 ஆண்டுகளாக நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம்.
திமுகவிலிருந்து அதிமுக பிரிந்து 54 ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்கட்சி எங்களுக்கு பகையாளி அல்ல; பங்காளி தான். அதற்காக நாங்கள் கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லவில்லை. அப்படியே அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அதில் ஒன்றும் தவறு இல்லை. திமுக, அதிமுகவை சட்டசபையில் ஒரே வரிசையில் காலம் அமர வைத்துவிட்டது. காலம் கனிந்து விட்டது. இதையெல்லாம் பார்க்கும் தொண்டர்கள், இருவரும் இணைந்து விட்டதாக நினைக்கின்றனர். இந்த இணைப்புக்கு எங்களுடன் இருந்த கூட்டணி கட்சிகளே காரணம். ஸ்டாலினால் தான் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு அதிமுக தொண்டர்கள் வந்துவிட்டனர்.
தற்போது கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே வெளியேறியிருந்தால், கூடுதல் தொகுதிகள் திமுகவுக்கு கிடைத்திருக்கும். திமுக கூட்டணியை உடைப்பதில் த.வெ.க. மட்டுமல்ல, வேறு பெரும் சக்தியும் வேலை செய்து வருகிறது. கூட்டணியிலிருந்து போகிறவர்கள் போகட்டும். இதை எதிர்கொள்வதற்கான வியூகங்களை திமுக தலைவர் ஸ்டாலின் வகுத்து வருகிறார். திமுகவிலிருந்து எந்த தலைவரும், தொண்டரும் செல்லவில்லை. கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.