பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு அதிரடியாக 16 மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில், அசிடைல் சாலிசிலிக் அமிலம் மற்றும் எத்தோஹெப்டசைன் கலவை, டைக்ளோமைன், பாராசிட்டமால், கிளிடினியம் புரோமைடு மற்றும் குளோர்டையாஸெபாக்சைடு கலவைகள், கில்க்லாசைட் மற்றும் குரோமியம் பிகொலினேட், பாராசிட்டமால் மற்றும் லிக்னோகைன், அமோக்ஸிசிலின், செராடியோபெப்டிடேஸ், லாக்டோபாகிலஸ் கலவைகள், அமோக்ஸிசிலின், க்ளோக்சாசிலின், லாக்டிக் ஆசிட் பேசிலஸ், செராடியோபெப்டிடேஸ் கலவைகள், அமோக்ஸிசிலின் மற்றும் செராடியோபெப்டிடேஸ், செபாட்ராக்சில் மற்றும் புரோபெனசிட், செபூராக்ஸைம் மற்றும் செராடியோபெப்டிடேஸ் ஆகியவை அடங்கும்.
மேலும், கற்றாழை (அலோ வேரா) மற்றும் வைட்டமின் ஈ, விட்டமின் ஏ, ஜோஜோபா ஆயில், ஆரஞ்சு ஆயில், டீ ட்ரீ ஆயில் போன்ற மூலிகைகள் கலந்த 10 வகையான தோல் மற்றும் அழகு சாதனக் களிம்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் கலவைகள் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் அமலாக்க முகமைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், தரமற்ற மற்றும் ஆபத்தான மருந்துகள் சந்தையில் புழங்குவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.