சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளிகளுக்கான என்ஓசி உள்ளிட்ட அனுமதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக்குவதாக கருத்து நிலவினாலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைப்பதை பாராட்டினார். பள்ளிகள் நடத்துவது லாபக் கணக்கு அல்ல, புண்ணியக் கணக்கு என்றும், பல பள்ளி நிர்வாகிகள் சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிகளை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இனிமேல் எந்தக் கட்சியினருக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தெரியும் என்று யாராவது கூறி பணம் கேட்டால் அவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். ஜூலை 1-ஆம் தேதி முதல் இணைய வழியாக மட்டுமே தனியார் பள்ளிகள் அனுமதிகள் பெற வழிவகை செய்யப்படும் என்றும், முடிந்தவரை கட்டணத்தைக் குறைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விழா முடிந்ததும் பேசிய தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு நிர்வாகி DNC இளங்கோ, கடந்த இரு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 2 ஆயிரம் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரத்தை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கியிருப்பதாகவும், சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு என்.ஓ.சி. வாங்க முன்பு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்த நிலையில், தற்போது ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அமைச்சர் வழங்கியிருப்பது கல்வித்துறையில் ஒரு புரட்சி என்றும் நன்றியை தெரிவித்தார்.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், தடையில்லா சான்றிதழ் வழங்க, முந்தைய தி.மு.க., ஆட்சியில் 25 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாக தனியார் பள்ளி கூட்டமைப்பினர் பேட்டி அளித்தனர். ஆனால், த.வெ.க., ஆட்சியில் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அங்கீகாரம் பெற்றிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம், முந்தைய தி.மு.க., ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.