கோவையில் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் சர்ச் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த கட்டுமானத்தில் உள்நோக்கம் இல்லை என கூற முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காளப்பட்டியில் 150 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில், 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ சர்ச் கட்டும் பணி 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் சர்ச் கட்ட அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக கோவில் நிர்வாகம் 2011 ஆம் ஆண்டு கோவை மாவட்ட முன்சிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு நிலுவையில் இருந்தபோதே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பக்தர்களின் கடும் எதிர்ப்பால், பணிகளை நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் 13 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தேவாலய நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2024 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு முடிவடைந்த பின் சர்ச் கட்ட விண்ணப்பிக்க அனுமதி அளித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த மாதம் சர்ச் கட்டும் பணியை மீண்டும் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்ச் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் டி.பாஸ்கர் வாதங்களை கேட்டறிந்தது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும், சில அடிப்படைவாத அமைப்புகள் துணிச்சல் பெற்றுள்ளன என்றும், கிராமங்களில் புதிதாக சர்ச்கள் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சபாநாயகர் பிரபாகர் கூட பதவியேற்பு நிகழ்ச்சியின்போது 'பைபிள்' வாசகங்களை மேற்கோள் காட்டியதாகவும், ஆயிரக்கணக்கான பைபிள் புத்தகங்களை வினியோகித்ததாகவும் கூறினார்.
கோவில் நகரமான மதுரையில் இருந்து தேர்வான எம்.எல்.ஏ., முஸ்தபா, 'சனாதன தர்மத்தை ஒழிப்பதே ஆளுங்கட்சியின் கொள்கை' என கூறியதாக மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. கிராமங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தொடர்பான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. கோவை மத உணர்வு மிகுந்த நகரம் என்றும், இங்கு குண்டு வெடிப்பு மற்றும் மத கலவரங்கள் நடந்துள்ளன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். முன்மொழியப்பட்ட சர்ச், தற்போதுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகில் அமையவுள்ளது. கோவில் அருகில் ஒரு பெரிய சர்ச் கட்ட முன்மொழியப்பட்டால், அதில் தீய நோக்கம் இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.
சர்ச் கட்டப்படும் பகுதி அரசு புறம்போக்கு இடம் என்பதை வருவாய் பதிவேடு காட்டுவதாகவும், ஒரு தேவாலயம் அமைக்க அனுமதி வழங்கும் உத்தரவு இந்த அம்சத்தை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது, கோவிலுக்கு அருகாமையில் சர்ச் கட்டுவதை அவர்கள் கடுமையாக எதிர்த்தால், அந்த எதிர்ப்பை சாதாரணமாக புறக்கணிக்கக் கூடாது என்றும், எதிர்மனுதாரர்கள் சர்ச் கட்ட காவல் துறை பாதுகாப்பை கோரியிருக்கக்கூடாது என்றும் கூறினர். 2010ல் சர்ச் கட்ட அனுமதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், 2011ல் அசல் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், 13 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த முற்படுவதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் சமூக நல்லிணக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவும், எதிர்மனுதாரர்களுக்கு எதிராகவே உள்ளது என்றும், அரசியல் சூழல் மாறக்கூடும், ஆனால் சட்டத்தின் நிலை அதுவாகவே இருக்கும் வரை, அதை செயல்படுத்துவது நம் கடமை என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிலுவை வழக்கு முடிந்த பின், சர்ச் கட்டுவதற்கு புதிய மனுவை சமர்ப்பிக்கலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, நிலுவை வழக்கு முடிவடையும் வரை, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்பதே அதன் வெளிப்படையான அர்த்தம். இந்த உத்தரவு இன்று வரை செல்லுபடியாகும். எனவே, சர்ச் கட்டும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.