இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்திய அணிக்கு தற்போதைய சூழலில் கம்பீர் போன்ற பயிற்சியாளர் தேவையில்லை என்றும், தோனி போன்ற ஒரு ஆலோசகர் தான் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஸ்ரீசாந்த், இந்திய டெஸ்ட் அணியின் சமீபத்திய சரிவுக்கு கம்பீரின் அணுகுமுறையே காரணம் என்று குற்றம் சாட்டினார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கம்பீரின் பயிற்சியில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. 2024 இல் நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் பெற்ற 0-3 என்ற வரலாற்றுத் தோல்வி மற்றும் 2025 இல் தென்னாப்பிரிக்காவிடம் பெற்ற 0-2 என்ற தொடர் தோல்விகள் கம்பீரின் பயிற்சியின் கீழ் தான் நடந்துள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
கம்பீர் வீரர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், வீரர்கள் சோபிக்காத போது அவர்களை அணியில் இருந்து நீக்குவதாகவும் விமர்சித்த ஸ்ரீசாந்த், 'பயிற்சியாளரை மாற்றுங்கள். இந்திய அணிக்கு ஆலோசகர் தான் தேவை. நீங்கள் முதலில் ஒரு சகோதரனைப் போல இருக்க வேண்டும். வெற்றி பெறும்போது சிரிப்பதும், தோற்கும்போது கோபப்படுவதும் சரியாக இருக்காது. தோனி ஒருபோதும் வீரர்களுக்கு இது போன்ற அழுத்தத்தை தந்தது கிடையாது. இந்திய அணிக்கு தோனி போன்ற ஒரு ஆலோசகர் தேவை' என்று கூறினார்.
மேலும், இந்த ஆண்டில் இந்திய அணி வென்ற டி20 உலகக் கோப்பைக்கான முழு பெருமையும் கம்பீரையே சேரும் என்பதை ஸ்ரீசாந்த் திட்டவட்டமாக மறுத்தார். களத்தில் வீரர்கள் எடுத்த முடிவுகளே வெற்றிக்குக் காரணம் என்று கூறிய அவர், சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பங்களிப்பும், சரியான நேரத்தில் பந்துவீச்சாளர்களில் செய்யப்பட்ட மாற்றங்களுமே வெற்றிக்கு வழிவகுத்தன என்றார். போட்டியின் போது பயிற்சியாளரா களத்தில் முடிவுகளை எடுக்கிறார் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா போன்ற எப்போது துடிப்பாக இருக்கும் பயிற்சியாளர்களே அணிக்கு பொருந்துவர் என்றும் ஸ்ரீசாந்த் கூறினார். கம்பீரின் அணுகுமுறை குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை வெற்றிகள் அவருக்கு சாதகமாக உள்ளன.