அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் சில்லரை எரிபொருள் விலையானது கச்சா எண்ணெயின் விலையை மட்டும் சார்ந்தது அல்ல. சுத்திகரிப்பு செலவுகள், போக்குவரத்து செலவுகள், மாநில மற்றும் மத்திய வரிகள் போன்ற பல காரணிகளும் இதில் அடங்கும். இந்திய எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடருமா அல்லது மீண்டும் உயருமா என்பதைப் பொறுத்தே விலைக் குறைப்பு குறித்து முடிவெடுக்கும்.
தற்போதைய நிலையில், எரிபொருள் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதற்குக் காரணம், ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ளது ஒரு தற்காலிக ஒப்பந்தம் மட்டுமே. இந்த ஒப்பந்தத்திற்கு நிரந்தர தீர்வு காண இரு தரப்புக்கும் 60 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டால், எண்ணெய் விலைகள் மீண்டும் உயரக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, நாளை காலையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சர்வதேச அரசியல் சூழல்களைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.