ஆன்மீக பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி! இனி தரிசனம் முதல் தங்குமிடம் வரை அனைத்து சேவைகளையும் ஒரே கிளிக்கில் பெறும் திட்டம் விரைவில் வரவுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் சுமார் 33,590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து தவெக அரசு பொறுப்பேற்று விஜய் முதலமைச்சரானார். அவரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பு ரமேஷூக்கு ஒதுக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக பல்வேறு கோயில்களில் அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். அதிகாலை வேளையில் திருச்செந்தூர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, சிறப்பு தரிசனத்துக்கு லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் அறநிலையத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கோயில் வளாகங்களில் இயங்கும் பூஜை பொருட்கள் விற்பனை கடைகளில் விலைப் பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்றும், தூய்மையான மற்றும் தரமான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும், அரசிடம் அனுமதி பெறாத எந்த பொருட்களையும் விற்கக் கூடாது என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில், தரிசன அனுமதி சீட்டு, பூஜை முன்பதிவு, அன்னதான அனுமதி சீட்டு, பிரசாதம் வாங்குதல், திருமண மண்டப முன்பதிவு மற்றும் தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இணையதளத்தின் மூலம் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இரண்டு கோவில்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் வெற்றிக்குப் பிறகு மற்ற முக்கிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூடிய விரைவில் இந்த இணையதளம் செயல்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.