சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 20 தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஆந்திர மாநில அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14 அன்றுடன் நிறைவடைந்த நிலையில், விசைப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கடலுக்குச் சென்று வருகின்றனர். இந்தச் சூழலில், ஆந்திர எல்லைக்குள் அண்டை மாநில மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும், சென்னை காசிமேடு மீனவர்கள் 20 பேர் ஆந்திர அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தி பரவியதும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவ சங்கத்தினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.