184 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழக அரசு இருபாலர் கல்வி பயிலும் அந்தஸ்தை வழங்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவின் பழம்பெரும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பச்சையப்பன் கல்லூரி, தனது 184 ஆண்டுகால பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு, அரசாணை (G.O. No.100 dated 15.06.26) மூலம் இந்தக் கல்லூரிக்கு இருபாலர் (Co-Educational) அந்தஸ்தை வழங்கியுள்ளது. 1842-ல் தொடங்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி, பல தலைமுறைகளாக கல்விச் சிறப்பின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது.
இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது, கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இது அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவம் மற்றும் சமூகத்தின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கான கல்லூரியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, மாணவிகளுக்கும் கல்லூரியின் வாயில்களைத் திறந்து, தரமான உயர்கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும், பன்முகத்தன்மை நிறைந்த கல்விச் சூழலை உருவாக்கி, கல்லூரியின் பாரம்பரியத்தையும் பெருமையையும் பாதுகாக்கும்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை பச்சையப்பன் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். பல்வேறு தரப்பினரின் நீண்டகால முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது. கல்லூரியின் எதிர்பார்ப்புகளை அங்கீகரித்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அனுமதியை வழங்கிய தமிழக அரசுக்கும் உயர்கல்வித் துறைக்கும் கல்லூரி நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.
புதிய அத்தியாயத்தை நோக்கி முன்னேறும் பச்சையப்பன் கல்லூரி, அறிவு, நற்பண்பு மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கும். இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது நிர்வாகச் சாதனை மட்டுமல்ல; இது இரு நூற்றாண்டுகளாக சமூகத்திற்குச் சேவை செய்துவரும் இந்தப் பெருமைமிகு கல்வி நிறுவனத்தின் பாரம்பரியத்தை, முன்னேற்றமிக்க எதிர்காலத்துடன் இணைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். 'புகழ்மிகு பச்சையப்பர் பாரம்பரியத்தைப் போற்றுவோம்; அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்குவோம்' என நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.