நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இந்த புதிய விலை நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது.
முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால், பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
கடந்த 7 நாட்களில் மட்டும் முட்டை விலை 55 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 55 ஆண்டு கால தமிழ்நாடு கோழிப் பண்ணை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிப் பண்ணையாளர்களுக்கு இது ஒரு சாதகமான சூழலாக இருந்தாலும், பொதுமக்களின் அன்றாட செலவினங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.