நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு எதிராக மூன்று தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கில் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சேகர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றியை எதிர்த்து தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகிய வாக்காளர்களும் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர, ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர் மரியவில்சன் வெற்றிக்கு எதிராக ஒரு வாக்காளரும், திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணியும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
திருவெறும்பூர் எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி வெற்றியை எதிர்த்து அன்பில் மகேஷ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் வெற்றியை எதிர்த்து ஒரு வாக்காளர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.