சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன், 'அடிக்கடி கரண்ட் போகுதே…' என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, 'சோலார் சிஸ்டம்னு ஒன்ன கண்டு பிடிச்சாங்க. யாராவது அதை ட்ரை பண்ணலாம். இவ்ளோ நாள் கரண்ட் பிரச்சனை இல்லாமல் இருந்திட்டீங்களா..ஜாலியா? பரவால்ல, ஒரு ஆறு மாசத்துக்கு எதுவுமே கேட்காதீங்க..என் வீட்ல கூட கரண்ட் எடுத்துக்கோங்கன்றேன்..' என்று பேசிய காணொளி வைரலானது. இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் விஜய்யை கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? கேள்வி கேட்டே ஆக வேண்டும் என இருக்கிறார்கள் என அவர் கூறியதாக ஒரு செய்தி பரவியது. ஏற்கனவே பகலிலும் இரவிலும் மின்வெட்டால் தவிக்கும் மக்களுக்கு, மகேந்திரன் சொன்ன விஷயம் மேலும் எரிச்சலை கிளப்பியது. இதனால், அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் அளித்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் யாரெல்லாம் சரியானவர்கள் என நம்புகிறேனோ அவர்களும் என்னைப் பற்றி பேசியிருந்தார்கள். கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? எனக் கேட்டேன். மின்சாரத் தடையை வைத்து அரசியல் செய்யும் சிலரைப் பார்த்துதான் அந்தக் கேள்வியைக் கேட்டேன். பொதுமக்களைக் கேக்கவில்லை. சோலார் பவர் எனச் சொல்லியிருக்க வேண்டும், எனக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை என்பதால் பிழையாகிவிட்டது. கொச்சி விமான நிலையம் முழுக்க சோலார் பவர் மூலமே இயங்குகிறது. அதைப் பார்த்தபோது நம்மூரிலும் இதனைச் செய்யலாமே, இங்கும் எத்தனை கிராமங்கள் மின்சார வசதி இல்லாமல் இருக்கின்றன? எனக் கேள்விகள் இருந்தது. அதனாலேயே அப்படிச் சொன்னேன்.' என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும், 'என் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றேன். உண்மையில், நானும் உங்களைப் போல்தான் சிரமப்படுகிறேன். வேண்டுமென்றால், என் வீட்டிலிருந்தாவது எடுத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொன்னேன். மகேந்திரனுக்குத் திமிர் அதிகம் என்றும் மக்களின் வலியை ஏளனம் செய்கிறான் என்றும் கூறுகிறார்கள். தயவுசெய்து அந்தப் படத்தை எனக்குக் கொடுக்காதீர்கள். இன்று, ஒருவேளை உணவு உண்கிறேன் என்றால் அது இந்த மக்கள் கொடுத்ததுதான் அவர்களை எப்படி அவமதிப்பேன்? நான் பேசியது மக்களிடம் காயத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' என்று கண்ணீர் மல்க அவர் கூறினார்.