இந்திய மாம்பழங்களில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகவும், எல்லைகளில் போதிய சோதனை வசதிகள் இல்லை என்றும் கூறி, நேபாள அரசு இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளதாகச் செய்திகள் பரவின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய மாம்பழங்களை ஏற்றி வந்த லாரிகள் மாதேஷ் மாகாண எல்லையில் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
எனினும், இந்திய அதிகாரிகளிடமிருந்து முறையான தாவர ஆரோக்கிய சான்றிதழ் பெறப்பட்டதை அடுத்து, அந்த லாரிகள் நேபாளத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. இதுகுறித்து ஜனக்பூர்தாம் பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் புவனேஸ்வர் பூர்பே, 'இந்திய மாம்பழ இறக்குமதியை நிறுத்தினால் உள்நாட்டுச் சந்தையில் கடுமையான பற்றாக்குறை ஏற்படும். நாட்டின் ஒட்டுமொத்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளூர் உற்பத்தி மட்டும் போதாது' என்று எச்சரித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேபாள வேளாண்மை, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. சந்தைத் தேவையின் அடிப்படையில் இந்திய மாம்பழங்கள் நேபாளத்திற்குள் நுழைவதற்கான அனுமதி தடையின்றி வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூச்சிகளால் பாதிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உரிய சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இந்திய மாம்பழங்கள் 48°C வெந்நீரில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுவதாக நேபாள அமைச்சகம் விளக்கியுள்ளது.