தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மாநில பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் முன்பே கடன் பொறுப்புடன் பிறக்கிறது என நிதியமைச்சர் மரிய வில்சன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையின்படி, 2021-2026 காலகட்டத்தில் மட்டும் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. இது மாநிலம் தனது முதல் 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலதன செலவினங்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதமாக இருக்கும் நிலையில், கடன் வளர்ச்சி விகிதம் 14.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதலீடுகளுக்காக அல்லாமல், அன்றாட செலவுகளுக்காக கடன் பெறப்படுவதையே இது காட்டுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு 1 ரூபாய் புதிய மூலதன செலவிற்கும் 2.26 ரூபாய் கடன் பெறப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் நிதிச் சிக்கலில் இருப்பதற்கு நான்கு முக்கிய காரணங்களையும் நிதியமைச்சர் பட்டியலிட்டார். ஆண்டுக்கு ரூ.25,000 கோடிக்கு மேல் செலவாகும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும், அவற்றுக்குத் தேவையான நிதி ஆதாரங்கள் உருவாக்கப்படவில்லை. வரி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. நிதித் திட்டம் ஒருநாள் முடிவுக்கு வரும் என்பது தெரிந்தும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மேலும், அன்றாட நிதிச் சிக்கல்களைச் சமாளிக்க மூலதனச் செலவுகள் தொடர்ந்து பலியிடப்பட்டதால், ரூ.31,050 கோடி மதிப்பிலான சொத்து உருவாக்கும் வாய்ப்பு இழக்கப்பட்டது.
மாநில பொதுத்துறை நிறுவனங்களில் நீண்டகாலமாக இருந்த கட்டமைப்புகள் மற்றும் பலவீனங்கள் சரிசெய்யப்படாமல் விடப்பட்டதும் நிதி நெருக்கடிக்கு ஒரு காரணம் என நிதியமைச்சர் மரிய வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கடன் சுமை, வருங்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்பதால், இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.