திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறு வியாபாரிகள் யாரும் அகற்றப்படவில்லை என்று கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது. கோயிலின் வளாகத்தைச் சுற்றி செயல்பட்டு வந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நிர்வாகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், கோயில் நடைபாதைகளில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், சிறு வியாபாரிகளின் வியாபாரத்தைத் தடுக்கவோ அல்லது முடக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், காவல்துறையினர் முன்னிலையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு, பக்தர்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளுக்கு தாமாகவே இடம் பெயருமாறு மட்டுமே வியாபாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கோயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, திருச்செந்தூர் கோயிலில் சிறு வியாபாரிகள் யாரும் அகற்றப்படவில்லை என்றும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லை என்றும் கோயில் நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. பக்தர்களின் நலன் மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.