ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டி மயானம் பகுதி சாலையோர முட்புதரில் புதையல் அல்லது தங்க நாணயங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவலை நம்பி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முட்புதர் பகுதிக்கு திரண்டு வந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிலர் தங்க நிறத்தில் சிறிய நாணயங்கள் கிடைத்ததாகக் கூறினர்.
ஆனால், கண்டெடுத்த நாணயங்களை மக்கள் கல்லில் தேய்த்து சோதித்தபோது, அவை தங்க நிறம் மாறி வெளிர் நிறமாக மாறியது. இதனால் அவை உண்மையான தங்க நாணயங்கள் இல்லை, வெறும் போலி நாணயங்கள் என தெரியவந்தது. இது தெரிந்ததும் மக்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.