ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின்போது, அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து, இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினையாக, அமெரிக்காவில் பயிலும் டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் ஒரு மீம் பக்கத்தை தொடங்கினார். இதற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்த நிலையில், அவர் அரசியல் இயக்கத்தையும் தொடங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, டெல்லி, பெங்களூரு, புனே, லக்னோ போன்ற நகரங்களில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டங்களை நடத்தியது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீடு குளறுபடி போன்ற விவகாரங்களை முன்வைத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், ஜெய்ப்பூரிலும் அக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் நிறைவடைந்த நிலையில், அபிஜீத் தீப்கேவை அவரது ஆதரவாளர்கள் தோளில் சுமந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்த சிலர் அவரை திடீரென கன்னத்தில் அறைந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்கள் அவர்களைப் பிடித்து அடித்து உதைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், 'அபிஜீத் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார். நான் ஒரு தேசியவாதி' என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அபிஜீத் தீப்கே, 'ஒருவரை தாக்குவது கோழைத்தனத்தின் வெளிப்பாடு. நாங்கள் காந்தி, அம்பேத்கரைப் பின்பற்றி அமைதியான வழியில் போராடுகிறோம். தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆக வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.