டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதிநவீன தானியங்கி இயந்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு மற்றும் பாட்டிலுக்கு 10 ரூபாய் வழங்கும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடை எண் 480-ல் சோதனை அடிப்படையில் இந்த AI வசதி கொண்ட இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த புதிய இயந்திரத்தில், காலி பாட்டிலின் லேபிளை ஸ்கேன் செய்து உள்ளே போட்டால், அதற்கான 10 ரூபாய் தொகை தானாகவே வழங்கப்படும். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இந்த தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலி மதுபான பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில், இந்த காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த சிறப்பு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே 28 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மாவட்டங்களில் அமல்படுத்த அவகாசம் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தினமும் சுமார் 2 கோடி மது பாட்டில்கள் விற்பனையாகும் நிலையில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மே 31ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.