ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் அறநிலையத்துறை நிர்வாகி ஒருவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோயில் இணை ஆணையர் முன்னிலையில், நிர்வாகி சேதுப்பிரியா தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது, முட்டை கலந்த கேக் வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சிக்கன் சுக்கா உள்ளிட்ட அசைவ உணவு வகைகளையும் சேதுப்பிரியா ஆர்டர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோயிலுக்குள் அசைவ உணவு ஆர்டர் செய்யப்பட்டு, அங்கேயே உட்கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, அறநிலையத்துறை நிர்வாகி சேதுப்பிரியா மீது பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோயிலின் புனிதத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.