சென்னை: அதிமுகவில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்யன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, இ.பி.எஸ். மகன் மிதுனை அ.தி.மு.க-வின் ஐடி விங் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலளித்துள்ள ராஜ் சத்யன், 'அரசியலில் தொடர்பில்லாத, கழக பொதுச்செயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்யப்படுகிறது. இது கழகத்திற்கு எதிரான ஒரு Narrative-ஐ உருவாக்குகிறது. சமூக வலைதளங்கள், பத்திரிகைகள், ஊடக விவாதங்கள் வரை இது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, உட்கட்சி நிகழ்வுகள், எங்களது உழைப்பைக் குறைத்துச் சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்களும் அடுத்த தலைமுறையினரும் பல வலிகளைச் சுமந்து வருகிறோம். இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் அது தவறுதான்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.