புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து ஆளும் கட்சி நிர்வாகிகளே குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். 50க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் செய்திகள் வருவதாக இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பதவி ஏற்கும் போது 'எல்லாரும் நல்லா இருப்போம்' என்று கூறியது இதுதானா? உங்கள் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும் போது எப்படி மக்கள் நன்றாக இருக்க முடியும்? உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டுமே நன்றாக இருப்பது போல் தெரிகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கள் கட்சித் தலைவர் முதல்வராக இருப்பதாலோ, அவர் கையில் காவல்துறை இருப்பதாலோ தவெக நிர்வாகிகளுக்கு எந்தவித பயமும் ஏற்படாமல் இருப்பது ஏன் என்றும் இபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறிய வழக்குகளில் எந்தவித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடுகளோ இன்றி நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.