தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்த 10 நாட்களுக்குள் அரசியலில் இருந்து விலகுவதாக பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தசாமி, கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெக-வில் இணைந்தார். அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் அவர் இணைந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
முன்னதாக, திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல்களை கோவிந்தசாமி மறுத்திருந்தார். 'நான் அதிமுகவின் உண்மையான விசுவாசி. என் தந்தையின் ரத்தம் மட்டுமே என் உடலில் ஓடுகிறது. எனக்கு ஒரே அப்பா அதிமுக தான்' என்று அவர் வீராவேசமாக பேசியிருந்தார். அவர் தவெக-வில் இணைந்த பிறகு, இந்த வீடியோவை பலர் பகிர்ந்து கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி நேற்று திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த வாரம் சூழ்நிலை காரணமாக வேறு இயக்கத்திற்கு சென்றேன். தற்போதைய சூழ்நிலையில் என் மனமும் உடலும் ஒத்துழைக்காத காரணத்தால் இன்று முதல் அரசியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். நான் எந்த இயக்கத்திலும் இல்லை. இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது சேவையில் மக்களோடு தொடர்ந்து இருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். தவெக-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி, 10 நாட்களில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது.