பர்மிங்காமில் இன்று (ஜூன் 14) நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் இந்திய மகளிர் அணிக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை சந்திக்க உள்ளது. பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள காணொளியில், ஆடவர் அணியின் முக்கிய வீரர்கள் வாழ்த்துச் செய்திகளைப் பதிவு செய்துள்ளனர். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், 'உலக அரங்கில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு பலருக்குக் கிடைப்பதில்லை. நீங்கள் நிச்சயம் 140 கோடி இந்தியர்களையும் பெருமைப்படுத்துவீர்கள்' என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மூத்த வீரர் ரோஹித் சர்மா, 'இந்திய மகளிர் அணி கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட்டில் கோப்பைக்கு மிக அருகில் வந்து பலமுறை தவறவிட்டாலும், இம்முறை அவர்கள் கோப்பையை வெல்வார்கள் என நம்புகிறேன்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேப்டன் சுப்மன் கில், 'நீங்கள் இதற்கு முன்னதாக சாதித்துக் காட்டியுள்ளீர்கள், இப்போதும் அதை மீண்டும் செய்வீர்கள்' என வாழ்த்தியுள்ளார். டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 'எதற்கும் அஞ்சாமல், ஆக்ரோஷமாக விளையாடி வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு விளையாடுங்கள்' என அறிவுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி 13-3 என்ற வலுவான வெற்றிக் கணக்கைக் கொண்டுள்ளது. இதனால், இந்தப் போட்டியில் இந்தியாவே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தற்போது டி20 உலகக் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோரின் பங்களிப்பு இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.