திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் கிராம மக்கள், அறிவிக்கப்படாத இரவு நேர மின்வெட்டைக் கண்டித்து சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இரவு நேரத்தில் அறிவிப்பின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் விவசாயம் மற்றும் அன்றாடப் பணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கிராம மக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சென்னை-திருப்பதி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம், உடனடியாக மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்றும், இனிமேல் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படாது என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மீண்டும் சீரானது.