இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் 21 ஆண்டுகால உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வெறும் 3 பந்துகளில் தவறவிட்டார். மேலும், குர்பாஸ் சதம் அடித்தும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டி, மழையின் காரணமாக தலா 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் மிகச் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அவர் வெறும் 48 பந்துகளில் தனது 9வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் முகமது ஷாசாத் 72 பந்துகளில் வைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
இந்த பிரம்மாண்ட சாதனையைப் படைத்த போதிலும், இந்தியாவுக்கு எதிராக அதிவேக ஒருநாள் சதம் அடித்த ஷாகித் அப்ரிடியின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை குர்பாஸ் 3 பந்துகளில் தவறவிட்டார். கடந்த 2005ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அப்ரிடி 45 பந்துகளில் சதம் விளாசி இன்றளவும் முதலிடத்தில் உள்ளார். குர்பாஸ் 48 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதியுடன் (27) இணைந்து குர்பாஸ் 4வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார். மொத்தம் 51 பந்துகளை சந்தித்த குர்பாஸ் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் உட்பட 102 ரன்கள் எடுத்து நிதிஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குர்பாஸின் அதிரடி ஆட்டத்தையும் மீறி இந்திய அணி ஆப்கானிஸ்தானை 194 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இந்திய அணி 195 ரன்கள் என்ற இலக்கை 22.5 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. அதிவேக சதம் அடித்தும், போட்டியில் தோல்வி அடைந்ததும் குர்பாஸ்-க்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.