திருவனந்தபுரத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம், கிரிக்கெட் பயிற்சி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கேரள கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் பயிற்சியாளர் மனுவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட மாணவர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மனு மீது மொத்தம் 6 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டாவது வழக்கின் விசாரணை திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஞ்சு மீரா பிர்லா முன்னிலையில் நடைபெற்றது. குற்றவாளி மனுவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 66,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு இந்த அகாடமியில் சேர்ந்த மாணவிக்கு, சிறப்பு உடற்தகுதி பயிற்சி அளிப்பதாகக் கூறி, ஜிம் மற்றும் குளியலறைக்கு அழைத்துச் சென்று மனு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மாணவியை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, இதுபற்றி வெளியே கூறினால் கிரிக்கெட் எதிர்காலத்தை அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி 2019 இல் அகாடமியை விட்டு வெளியேறினார்.
பல ஆண்டுகள் கழித்து, பெண்கள் கிரிக்கெட் போட்டியின் போது மனுவை கண்ட ஒரு மாணவி பயத்தில் கதறி அழுதார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மனுவின் பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. மேலும் 5 மாணவிகள் புகார் அளித்தனர். முதல் வழக்கின் தண்டனை முடிந்த பிறகே இந்த 2வது வழக்கிற்கான 35 ஆண்டுகள் சிறை தண்டனை தொடங்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் மனு தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்க நேரிடும்.