முதல்வர் விஜய் அவர்களால் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடி பாதுகாப்பு படை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயுதங்கள் ஏதுமின்றி குற்றச் சம்பவங்களை எப்படி தடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் சிங்கப்பெண் சிறப்பு படை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,545 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, 49 காவல் ஆய்வாளர்கள், 98 உதவி ஆய்வாளர்கள், 196 இரண்டாம் நிலை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு சிங்கப்பெண் சிறப்பு படையை பயன்படுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு அதிரடிப்படைக்கு நேரடியாக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யும் அதிகாரமும் இல்லை.
தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தப் படையினருக்கு, தேவைப்பட்டால் கை துப்பாக்கி வழங்கப்படும் என ஐஜி பவானிஸ்வரி தெரிவித்துள்ளார். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைப்பது மட்டுமே இவர்களது பணியாகும். லத்தி போன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி குற்ற சம்பவங்களை தடுப்பது கடினம் என்றும், அசாதாரண சூழலில் நிராயுதபாணியாய் நிற்கும் போது தாக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. எனவே, உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினால், பெண் போலீசார் தங்களையும் மற்ற பெண்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.