குழந்தைகள் அனைவருக்கும் அவர்களின் குழந்தைப்பருவத்தையும் முறையான கல்வியையும் வழங்க வேண்டியது அனைவரின் கடமை என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஜூன் 12-ஆம் நாள் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.
துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி பயிலும் இனிய பருவமே குழந்தைப் பருவம் என்றும், இச்சூழலில், பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை அக்கொடுமையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தையும், முறையான கல்வியையும் வழங்கிட வேண்டியது நம் அனைவரின் கடமை என்றும் முதல்வர் குறிப்பிட்டார். ஒவ்வொரு குழந்தைக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை ஆகியவை அவசியமானவை என்றும், இவற்றை வழங்க மறுப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்றும் அவர் கூறினார்.
குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எதிராக எந்தவிதமான தொழில்களிலும் குழந்தைகளைப் பணியமர்த்தக் கூடாது என்றும், வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் முதல்வர் வலியுறுத்தினார். குழந்தைகளைத் தொழிற்பணிகளில் ஈடுபடுத்தாமல் அவர்களுக்கான உரிமைகளைப் பேணிக்காத்து, முறையான கல்வி அளித்து, மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அவர்கள் பெறுவதை உறுதி செய்வதுடன், வளமான எதிர்காலத்தை உருவாக்குவதையே தமிழ்நாடு அரசு தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்பின் மூலம் பெறப்படும் வருமானம் வீட்டிற்கும், நாட்டிற்கும் சிறுமை என்பதை சமூகமும், பெற்றோர்களும் உணர்ந்து, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திட தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் துணை நின்று, குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம் என்றும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறையைத் தகர்த்து, கல்வி அளித்து குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம் என அவர் அழைப்பு விடுத்தார்.