தற்போதைய விஜய் ஆட்சியை குறை கூறாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் பழக்கம், ஊழல் ஆகியவற்றை அரசு இன்னும் கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கு தொடர்பாக, ஒரு வாரம் கழித்து சி.பி.சி.ஐ.டி-யிடம் ஏன் ஒப்படைக்கப்பட்டது? இதில் உள்நோக்கம் உள்ளதா? யாரையாவது காப்பாற்ற முயற்சிக்கிறீர்களா? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். மேலும், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அரசு நேரத்தில் தனியார் சிகிச்சை அளிக்கக் கூடாது என்ற மருத்துவதுறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
கஸ்தூரிபாய் பிரசவ மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், குறிப்பாக தண்ணீர் வசதியை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தமிழகத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டம், நீர்நிலைகள் சீரமைப்பு மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளுக்காக முதல் தவணையாக ரூ. 7500 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிதி எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சி.எம்.டி.ஏ.வில் 15 நாட்களில் 300க்கும் மேற்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் அதிக கவனத்துடன் விஜய் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
