இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூன் 13ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரில், ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசான்பர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனக்கு வழங்கிய ஆலோசனைகளை, இந்திய அணிக்கு எதிராகவே பயன்படுத்தி வெற்றி பெறப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய 20 வயதான கசான்பர், மெகா ஏலத்தில் 4.8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடாத இவர், இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 10.01 எகானமி ரேட்டில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மும்பை அணியில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடிய அனுபவம் குறித்து கசான்பர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இது குறித்து கசான்பர் கூறுகையில், 'ரோஹித் சர்மா ஒரு தலைசிறந்த வீரர் மற்றும் ஜாம்பவான். ஐபிஎல் தொடரின் போது அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக, நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவர் எனக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கொடுத்த அந்த ஆலோசனைகளை அவருக்கு எதிராகவே இந்த தொடரில் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம்' எனத் தெரிவித்தார். மேலும், ஐபிஎல் அனுபவம் குறித்து பேசிய அவர், 'மிகச்சிறந்த முன்னணி வீரர்கள் மற்றும் அற்புதமான பயிற்சியாளர்களுடன் இணைந்து விளையாடியதும், ஒரே அறையை பகிர்ந்து கொண்டதும் எனக்கு பல புதிய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. கிரிக்கெட் என்பது தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விளையாட்டு. நான் எதிர்காலத்திலும் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்றும் கூறினார்.
இந்தியாவின் தற்போதைய கடுமையான வெயிலை சமாளிக்க ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உதவும் என்றும், காபூலில் ஒரு மாதம் பயிற்சி முகாமில் ஈடுபட்டதால் ஆடுகளம் மற்றும் வானிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கசான்பர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அணியில் தற்போது அதிக திறமையான இளம் வீரர்கள் உருவாகி வருவதாகவும், கடின உழைப்பு, முழு நம்பிக்கை மற்றும் திறமைகளை வளர்த்துக்கொண்டால் எதையும் சாதிக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
