அனைத்து 25 மாநகராட்சிகளிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதே காலக்கெடுவுக்குள் 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் தினமும் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சி ஆய்வுக்கூட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் இந்த முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இதன்படி, அனைத்து மாநகராட்சிகளிலும் 100% குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்புகள் ஏற்படுத்தவும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்கவும், சுத்திகரிக்கப்படாத நீரை மறுபயன்பாட்டிற்கு விரிவுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கூவம் ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்புப் பணிகள், அடையாறு ஆறு சீரமைப்புத் திட்டத்துடன் இணைந்து விரைவுபடுத்தப்படும். சென்னை நீர்வழித்தடங்களை இணைக்கும் நீல-பசுமை நகர்ப்புற தாழ்வாரங்களை உருவாக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும். 2031-க்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பசுமை உட்கட்டமைப்பு மற்றும் திறந்தவெளி பொது இடங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி நகரங்களில் நவீன பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வெள்ளத் தடுப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைக்காக Sponge Parks அமைக்கவும், மக்கள் தொகை 1 லட்சத்தை மீறும் நகர்ப்புற பகுதிகளில் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 5 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2031-க்குள் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) மையங்கள் அமைக்கப்பட்டு, வெறிநாய் பாதிப்புகள் குறைக்கப்படும். முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றம் இயக்கம் (CMIUTM) 2026-31 திட்டத்திற்கு ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. மத்திய அரசின் Urban Challenge Fund மூலம் தமிழகத்திற்கு சுமார் ₹30,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பெற வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.