திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கோவில் திருப்பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், சில புதிய திட்டங்களையும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், முந்தைய ஆட்சியில் பழனி கோவில் நிர்வாகம் வணிக நோக்கத்துடன் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார். அந்த தவறான நடைமுறைகளை மாற்றி, பக்தர்களுக்கு முழுமையான பயன் கிடைக்கும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என உறுதியளித்தார். அவர் பொது தரிசன வரிசையில் மக்களோடு மக்களாகக் காத்திருந்து சாமி தரிசனம் செய்து, அன்னதான வரிசையில் நின்று பொதுமக்களுடன் உணவருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பழனி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன் பெயர் திறப்பு விழா பேனரில் விடுபட்டிருந்தது. இதையறிந்த அமைச்சர் ரமேஷ், உடனடியாக எம்எல்ஏ ரவிமனோகரனிடம் நேரில் சென்று, 'தவறாக நினைக்க வேண்டாம். இனி இது போல் நடக்காது. நீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. நீங்கள் மக்கள் பிரதிநிதி' என்று கையைப் பிடித்து வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமைச்சர் ரமேஷின் இந்த செயல், அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அமைச்சர் நடந்துகொண்டதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என அமைச்சர் உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.