தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள 'We the leaders' இயக்கத்தில் தகுதியானவர்களுக்கு விரைவில் பொறுப்புகள் வழங்கப்படும் என பாஜகவில் இருந்து விலகி தனி இயக்கம் தொடங்கியுள்ள அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது 'We the leaders' இயக்கம் உங்கள் அனைவரின் பேராதரவுடன் தொடங்கப்பட்டு, மூன்று நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! இது ஒரு சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன' என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில், நான் உட்பட அனைவரும் இந்த இயக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே என்றும், யாருக்கும் எந்த பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும் என்றும், நிரந்தரப் பதவி என்பது இயக்கத்தில் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஒரு மாத காலம் உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே இயக்கம் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில தன்னார்வலர்கள் எனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி சில இயக்கங்களைத் தொடங்கி, மாவட்ட வாரியான பொறுப்புகளையும் அறிவித்துள்ளதாக தெரியவருவதாகவும், இது முறையான செயல் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த இயக்கங்களுக்கும், 'We the leaders' இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இதுபோன்ற செயல்பாடுகளால் நீர்த்துப் போய்விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.