திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது நடைபெறும் தவெக அரசு மூன்று மாதங்கள் கூட தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் இவ்வாறு கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின், பனையூர் பாபுவை திமுகவில் வரவேற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டமன்றத்தில் பனையூர் பாபுவின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும், தொகுதி சார்ந்த பிரச்சனைகளை அவர் வலியுறுத்தி பேசியதையும் தான் கவனித்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார். அவரது அரசியல் மாறுபாடுகளை விளக்கத்தோடு சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில் யாரையும் புண்படுத்தும் வார்த்தைகள் இல்லை என்றும், கொண்ட கொள்கைக்காக உறுதியுடன் பணி செய்யக்கூடியவர் பனையூர் பாபு என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
திமுக ஆட்சியில் பரமக்குடியில் சாதி மறுப்பு போராளி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம், நந்தனத்தில் எம்.சி ராஜா மாணவர் விடுதியை புதுப்பித்து கட்டியது போன்ற சாதனைகளை ஸ்டாலின் பட்டியலிட்டார். மேலும், செய்யூர் தொகுதிக்கு கலை அறிவியல் கல்லூரி, புதிய சிப்காட் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை, 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலைபின்னும் கூடங்கள், கடல் அரிப்பை தடுக்க தடுப்புச் சுவர்கள், பத்தாயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் என எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.
தற்போதைய ஆட்சி குறித்து பேசிய ஸ்டாலின், 'ஆட்சி பொறுப்பேற்ற போதே ஆறு மாதத்திற்கு விமர்சிக்கமாட்டோம் என்று கூறி இருந்தோம். ஆனால் ஆறு மாதத்திற்கு உள்ளேயே பேசக்கூடிய சூழல் வந்துவிடுமோ? என்ற அச்சம் வந்துவிட்டது, பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி ஆறு மாதம் அல்ல, ஐந்து மாதம் அல்ல, மூணு மாசமாவது தாங்குமா?' என்ற கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடப்பதாக தெரிவித்தார். உழைப்பதற்கு தயாராக இருக்கும் தங்களுக்கு, துணையாக வந்து சேர்ந்திருக்கும் பனையூர் பாபுவையும் அவரது ஆதரவாளர்களையும் திமுகவின் தலைமை தொண்டனாக வரவேற்பதாக அவர் கூறினார்.