வீடுகளில் அதிநவீன ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்திற்கான டெண்டர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோரப்பட்டது. இதில் சுமார் 50 நிறுவனங்கள் பங்கேற்றன. இருப்பினும், தேர்தல் காரணமாக டெண்டர் திறப்பு தாமதமானது.
தற்போது, மின்வாரியத்தின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட தவெக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் வீடுகளில் பொருத்தப்பட்டால், மிகச்சிறிய அளவிலான மின் நுகர்வைக் கூட மிகத் துல்லியமாகக் கணக்கிடும் திறன் கொண்டவை. இதனால் மின் பயன்பாட்டு அளவு முந்தைய காலங்களை விடச் சற்று உயர வாய்ப்புள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம் மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து கணக்கெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே கண்காணிக்கப்படும். உங்கள் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டாலோ அல்லது மின் பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்தாலோ, அது குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி உடனடியாக உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
ஆனால், மின்வாரியத்தின் நிதி நிலைமையை சமாளிக்கும் நோக்கில், இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை தற்போதைக்கு கைவிடும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.