லெபனானுடனான போர்நிறுத்தத்தை மீறி, அந்நாட்டின் தெற்கு நகரங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 58 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களால், கடந்த சில நாட்களில் மட்டும் லெபனானில் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.
நேற்று அதிகாலை, மாகாணங்களை இணைக்கும் முக்கியப் பாதையான அஸ்லூன் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். நபதியா பகுதியிலும் நடந்த தாக்குதலில் லெபனான் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
தெற்கு லெபனான் மட்டுமல்லாமல், நாட்டின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியப் பகுதியாகக் கருதப்படும் இங்கு, சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் குண்டுமழை பொழிந்துள்ளது.
தாக்குதலுக்கு முன்பாக, தெற்கு லெபனானின் Tyre உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இதன் மூலம், லெபனானின் சுமார் 14 சதவீத நிலப்பரப்பு மக்கள் கட்டாய இடப்பெயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுவது கடுமையான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.