அதிமுக எங்கள் உயிர் மூச்சு என்றும், பதவிக்காக நாங்கள் செயல்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு பேட்டி அளித்தார்.
'எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். நானும், சி.வி.சண்முகமும் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அவற்றை ஏற்று ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றுவதாக இ.பி.எஸ். கூறியுள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். சில ஊடகங்கள் நாங்கள் பதவிக்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தோம் என தவறாக செய்தி வெளியிடுகின்றன. அது உண்மையல்ல. மக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்தார்கள் என்ற அடிப்படையில், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தோம். திமுக எதிர்ப்பு என்ற நோக்கிலேயே இந்த ஆதரவு வழங்கப்பட்டது,' என்று அவர் விளக்கினார்.
மேலும் பேசிய எஸ்.பி.வேலுமணி, 'சி.வி.சண்முகம் உட்பட அனைவரும் அதிமுகவில் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை வளர்த்த கோடிக்கணக்கான தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதையே நாங்கள் செய்வோம். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பொதுச் செயலாளரை சந்தித்து, அந்தக் கருத்து வேறுபாட்டை சரிசெய்துவிட்டோம். சி.வி.சண்முகம் தரப்பினரும், நாங்களும் ஒற்றுமையாக முடிவெடுத்துள்ளோம்,' என்று தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, 'தேவையான கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுகிறேன்' என்று அவர் பதிலளித்தார். புதிய அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவோம் என்றும், கோயம்புத்தூர் உட்பட தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அமல்படுத்தாவிட்டால் சட்டமன்றத்தில் வலிமையாக குரல் எழுப்புவோம் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் குற்றங்கள் மற்றும் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும், இதனை அரசு தடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.