நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியான 'மிஸ்டர் பச்சன்' படம் மூலம் புகழ்பெற்ற இவர், 'காந்தா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது 'சேயோன்' படத்தில் இணைந்திருப்பது குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் 26-வது திரைப்படமான 'சேயோன்' படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தை, கமல்ஹாசன் தயாரிக்கிறார். இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'விருமாண்டி' படத்தைப் போன்று, மதுரை பின்னணியில் கருமாத்தூர் தெய்வங்களை மையமாக வைத்து, ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக 'சேயோன்' உருவாகி வருகிறது.
படத்தின் தயாரிப்பு குறித்து பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், 'அன்புள்ள கமல்ஹாசன் சார்… நீங்கள் என் தோள்களில் கை வைத்து வாழ்த்து தெரிவித்த அந்த நொடி என்னுள் இருக்கும் சிறுமி துள்ளி குதித்தாள். ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்ததில் பெருமை அடைகிறேன். உங்களை பெருமைப்படுத்தும் விதத்தில் சிறந்த பங்களிப்பை கொடுப்பேன்' என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் வாழ்த்தும், ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்ததும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
