நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புத்தூர் வயல் கிராமத்தில் ஷாஜகான் என்பவரின் மகன் மிஸ்ஹாப் (14) என்ற மாணவன், 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென சாலைக்கு வந்த ஒரு யானை அவரைத் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து தங்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிதர் காடு அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நெலாக்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யானை தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வனவிலங்கு-மனித மோதலைத் தடுக்க அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.