ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது இளம்பெண்ணை, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக் கோரி, பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கும், செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்த விவரங்களை போலீஸ் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தனது வழக்கையும் திருவண்ணாமலை நீதிமன்றம் விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிகளவில் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சம்பந்தப்பட்ட காவலர்கள் இருவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை வரும் ஜூன் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், திருவண்ணாமலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மாதங்கள் ஆகியும் விசாரணை துரிதப்படுத்தப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த பாலியல் வழக்கை திருவண்ணாமலை நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து, வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.